சென்னை: தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் அரசு கண்டுகொண்டதில்லை. ‘டார்கெட்’ வைத்து ‘டாஸ்மாக்’ மூலம் வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருந்தது. ஆனால், இந்தக் கொரோனா பரவல், ஒரே நாளில், ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூட வைத்தது. மது விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தியது. ‘நீயின்றி நானில்லை’ என, மதுபோதைக்கு உடலைப் பழக்கிக்கொண்ட குடிமகன்களுக்கோ, மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களின் இந்த பலவீனம், கள்ளச் சந்தையில் டாஸ்மாக் சரக்குகள் விற்பனை செய்வது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத காரியங்கள் நடப்பதற்கும் வழி வகுத்தது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையினர், அவசர அவசரமாக கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் இருப்புகளைக் கணக்கிட்டு, அதனை மாவட்ட அலுவலகத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தனர்.