திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: இதயத்தில் இடியும், மின்னலும் ஒரு சேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வர வேண்டும். திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றி பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நம்மை விட்டு பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது. கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க, திமுக முன்னெடுத்த செயல்திட்டங்களை சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சகோதரர் ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி நம்மை விட்டு பிரிந்துவிட்டார். மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் வீரம், மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் சகோதரர் ஜெ.அன்பழகன்.