தூத்துக்குடி: ஊரடங்கு உத்தரவால் கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் வாகைகுளம் அருகே இசைக்கலைஞர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே உள்ளது திம்மராஜபுரம். இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள். இவர்கள் தவில், நாதஸ்வரம், உருமி, தாரை தப்பட்டை வாசித்து வருகின்றனர். மேலும் சிலர் கிளாரினெட், டிரம்ஸ், சாக்ஸ்சாபோன் ஆகியவை இசைக்கும் கலைஞர்கள். திருமணம், சடங்கு, கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விழாக்கள் நடந்தால் மட்டுமே இவர்களது வாழ்வாதாரம் சுமூகமாக இருக்கும். கோடை காலங்களில் பல கோயில்களில் திருவிழாக்கள் நடப்பது வழக்கம் என்பதால் இந்த காலங்களில் அவர்களது வருவாய்க்கு குறைவில்லாமல் இருக்கும்.