புதுடெல்லி: இந்தியாவில் நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ‘பிபா’ அறிவித்துள்ளது.இந்திய கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தொடர் நவம்பர் 2ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற இருந்தது. கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், அகமதாபாத், நவி மும்பை ஆகிய இடங்களில் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமிறங்க அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில், முதல் முறையாக இந்திய அணி பங்கேற்கத் தகுதி பெற்றிருந்தது.