சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக கபசுர குடிநீர் என்ற சித்த மருத்துவம் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த குடிநீர் தயாரிப்பதற்கான மூலிகையை வாங்குவதற்கு சித்த மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த கபசுர குடிநீரை கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கவும், இந்த வைரஸ் தாக்காமல் இருக்க தடுப்பு மருந்தாக வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி பி.ஏ.ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூம் வீடியோ ஆப் மூலம் நேற்று விசாரணைக்கு வந்தது.