திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: வரும் 10ம் தேதி மகாதீபம்

தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கொடியேற்றத்தை காண அதிகாலை 4 மணி முதல் கோவிலில் குவிய தொடங்கினர். விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். வருகிற 7ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை தீபத்திருவிழ வருகிற 10ம் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சென்னை பல்லாவரம் ஸ்ரீஅருணாச்சலா ஆன்மிக சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் அண்ணாமலையார் கோயிலுக்கு திருக்குடைகள் உபயம் வழங்குவது வழக்கம். அதன்படி 15ம் ஆண்டாக ரூ3 லட்சம் மதிப்பில் 13 திருக்குடைகள் உபயம் அளிக்கும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு நேற்று சிறப்பு பூஜை, அபிசேக ஆராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து 16 கால் மண்டபத்தில் இருந்து ஸ்ரீஅருணாசலா சேவா சங்கத்தின் தலைவர் ரவி தலைமையில் 13 திருக்குடைகளின் ஊர்வலம் 16 கால் மண்டபம் முன்பிருந்து புறப்பட்டு, மாடவீதியில் மேளதாளம் முழங்க வந்தது. அதைத்தொடர்ந்து ஆன்மிக சேவா சங்க நிர்வாகிகள் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகரிடம் ரூ3 லட்சம் மதிப்பிலான 13 திருக்குடைகளை வழங்கினர்.

Related Stories: