புஸோ: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் முதல் சுற்றிலேயே வெளியேறினார். முதல் சுற்றில் சீன வீராங்கனை கெய் யான் யானுடன் நேற்று மோதிய சாய்னா (9வது ரேங்க்) 9-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி வெறும் 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உலக சாம்பியன் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், சாய்னாவும் தோல்வியைத் தழுவியதால் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை முற்றிலுமாகத் தகர்ந்தது.