திருப்பத்தூர்: அதிமுகவில் இனி எப்போதும் சசிகலா, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இடமில்லை என வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு புதிய குளிர்சாதன பஸ்சை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பத்தூர் தனி மாவட்டமாக வரும் ஜனவரி மாதம் முதல் செயல்படும். அதற்கான ஆயத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் வேகமாக நடக்கிறது. அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது. வேலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நாளை முதல் நடைபெறும். சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை ஆன உடன் அதிமுகவில் மாற்றம் வரும் என கூறுவதை ஏற்க முடியாது.