கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு; ஜி.கே.மணிக்கு அன்புமணி நோட்டீஸ்: ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

சென்னை: கடந்த சில மாதங்களாக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு தரப்பினரும், மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கூட ஜி.கே.மணி, அன்புமணியை கடுமையாக விமர்சித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில், அன்புமணி பாமக தரப்பினர் வெளியிட்ட அறிக்கை:
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லை கடந்தவையாக இருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதி 30ன்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் நேற்று கூடி விவாதித்தது. அப்போது ஜி.கே.மணியின் இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.

1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த டிசம்பர் 6ம் தேதி டெல்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் நேர்காணல் அளித்தது.
2. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த டிசம்பர் 15ம் நாள் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது. இந்த இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: