கொள்ளை பணத்தை பிரித்ததில் முன்விரோதம் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு: அண்ணாசாலையில் பரபரப்பு

சென்னை: திருவல்லிக்கேணி பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (28). ஆட்டோ டிரைவரான இவர் மீது அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் நிலுவையில்  உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணாசாலையில் பூபேகம் தெரு அருகே இவர் சென்றபோது, 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து, அரிவாளால் வெட்டினர். சுதாரித்துக்கொண்ட ராஜா, தன்னை காத்துக்கொள்ள  கத்திக்கொண்டே அண்ணாசாலை நோக்கி ஓடினார். ஆனாலும், அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று வெட்டியது. இதைப் பார்த்த பொதுமக்கள் சிதறி ஓடினர். பதற்றமான சூழல் நிலவியதை கவனித்த 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து  தப்பியது. தகவலறிந்த அண்ணாசாலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய ராஜாவை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வழக்கு பதிவு செய்த  போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், ஆட்டோ டிரைவர் ராஜா தனது கூட்டாளிகளான பார்டர் தோட்டத்தை சேர்ந்த விமல் (21),  பிரகாஷ் (32), வாஞ்சிநாதன் (35), திருவல்லிக்கேணி நடைபாதையில் வசித்து  வரும் கருணாகரன் (35) ஆகியோருடன் சேர்ந்து, கடந்த 2009ம்  ஆண்டு பல இடங்களில் கொள்ளையடித்துள்ளார்.  அப்போது கொள்ளையடித்த பணத்தை பிரித்தபோது ராஜா அதிகமாக எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 10  ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்க்க ஆட்டோ டிரைவர் ராஜாவை வெட்டியது தெரியவந்தது. அதைதொடர்ந்து 4 ரவுடிகள் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், செல்போன் சிக்னலை வைத்து நேற்று அதிகாலை அவர்களை கைது செய்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: