மும்பை: ‘மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா உட்பட 7 பேரும், வாரத்தில் ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் மசூதி அருகே கடந்த 2008ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 7 பேரும் கடந்த ஆண்டு அக்டோபரில் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், போபால் மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக பிரக்யா களமிறக்கப்பட்டு உள்ளார்.