சென்னை: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து வருவாய் துறை செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஏப்ரல் 26ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பூந்தமல்லியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பட்டா வழங்கும்படி திருவள்ளூர் கலெக்டருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் என்றும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுதாரர் அளித்த மனு நிலுவையில் உள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பணிநீக்கம் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து விளக்கம் அளிக்க வருவாய்த்துறை செயலாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தனர்.