சென்னை: கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட 379 மில்லியன் கன அடி நீருக்கு 25 கோடி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கடந்த பிப்ரவரி 5ம் தேதி பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர் தலைமையில் பொறியாளர்கள் குழுவினர் ஆந்திரா சென்றனர். அப்போது, 4 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று ஆந்திர நீர்வளத்துறை செயலாளரை வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், 1 டிஎம்சி தண்ணீர் தர ஆந்திர அரசு சம்மதித்தது. இதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி 6ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2ம் தேதி கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது வரை கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 379 மில்லியன் கன அடி நீர் மட்டுமே கிடைத்துள்ளது. இது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.