சென்னை: சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 6 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து தீவைத்து எரித்த கொலைகார தாயை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி என்பவரும், கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெயகாந்தன் என்ற 6 வயது மகன் இருந்தார். கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு, தனது பிறந்த வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு மீனாட்சி செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதுபோல நேற்று முன் தினமும் கணவனுடன் சண்டையிட்டு பெற்றோர் வீடு உள்ள கரையான்சாவடிக்கு மீனாட்சி சென்றுள்ளார். ஆனால் பெற்றோர் அவரை வீட்டில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து வீட்டின் பின்புறம் உள்ள மோட்டோர் ரூம் போன்ற அறையில் தனது மகனுடன் மீனாட்சி தங்கியுள்ளார். இன்று காலையில் மீனாட்சி மாயமான நிலையில், வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து உடல் எரிந்து போன துர்நாற்றம் வரவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.