சென்னை: திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. முருகப்பெருமான், அசுரர்களுடன் கடலில் போர் புரிந்த தலம் திருச்செந்தூர். விண்ணில் போர் புரிந்த தலம் திருப்பரங்குன்றம். மண்ணில் போர் புரிந்த தலம் திருப்போரூர் என்பது ஐதீகம். ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் 6 நாள் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா அடுத்த மாதம் 8ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை கிளி வாகனத்திலும், மறுநாள் நவம்பர் 9ம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 10ம் தேதி சனிக்கிழமை புருஷா மிருக வாகனத்திலும் முருகப்பெருமான் வீதி உலா நடைபெறுகிறது. நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 11ம் தேதி காலையில் பல்லக்கு உற்சவமும் பூத வாகனத்தில் வீதி உலாவும், 12ம் தேதி திங்கட்கிழமை வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.