திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா: நவ.8ம் தேதி தொடக்கம்

சென்னை: திருப்போரூரில்  புகழ்பெற்ற கந்தசுவாமி கோயில்  உள்ளது. முருகப்பெருமான், அசுரர்களுடன்  கடலில் போர் புரிந்த தலம்  திருச்செந்தூர். விண்ணில் போர் புரிந்த தலம்  திருப்பரங்குன்றம். மண்ணில்  போர்  புரிந்த தலம் திருப்போரூர் என்பது  ஐதீகம். ஆண்டு தோறும் ஐப்பசி  மாதத்தில் 6 நாள் கந்தசஷ்டி விழா  சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு  கந்தசஷ்டி விழா அடுத்த மாதம்  8ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9  மணிக்கு  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று  மாலை கிளி வாகனத்திலும்,  மறுநாள் நவம்பர் 9ம் தேதி ஆட்டுக்கிடா  வாகனத்திலும், 10ம் தேதி சனிக்கிழமை  புருஷா மிருக வாகனத்திலும்  முருகப்பெருமான் வீதி உலா நடைபெறுகிறது. நான்காவது நாளான   ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 11ம் தேதி காலையில்  பல்லக்கு உற்சவமும் பூத  வாகனத்தில் வீதி உலாவும், 12ம் தேதி திங்கட்கிழமை  வெள்ளி அன்ன வாகனத்தில்  வீதி உலாவும் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய  நிகழ்ச்சியான  சூரசம்ஹாரம் நவம்பர் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6  மணிக்கு நடைபெற  உள்ளது. இதில் முருகப்பெருமான் தங்கவேல் கொண்டு சூரபத்மனை  வதம் செய்யும்  நிகழ்ச்சி  நபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு தங்கமயில்  வாகனத்தில்  முருகப் பெருமான் வீதி உலாவும், மறுநாள் 14ம் தேதி காலை 6  மணிக்கு  முருகன் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் வீதி உலாவும்   நடைபெற  உள்ளது. கந்தசஷ்டி விழாவையொட்டி 6 நாட்களும் லட்சார்ச்சனை நடைபெற   உள்ளது. இதற்கு கட்டணமாக 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விழா  ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கந்தசுவாமி   திருக்கோயில்  செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் வெற்றிவேல் முருகன்  ஆகியோர் செய்து  வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: