சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் அதை ஒட்டிய பார்களில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனே அமைக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் 4701 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது. இவற்றில் 26,488 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல், இந்த கடைகளுடன் இணைந்து 1,300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பார்களிலும் பாரின் அளவை பொறுத்து சுமார் 5 முதல் 10 வரையிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருநகரம் மற்றும் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடை, ஊரின் உட்பகுதிகளில் தான் அமைக்கப்பட்டிருக்கும். இதில் தினம்தோறும் மதுபானங்களை வாங்க வரும் குடிமகன்கள் பிளாஸ்டிக் கப் மற்றும் பாட்டில்களை பயன்படுத்திவிட்டு அருகாமையிலேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதை அப்புறப்படுத்தவும் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், கடை மற்றும் பார்களில் பணியாற்றும் ஊழியர்கள், கடைகளுக்கு வரும் மதுபிரியர்கள் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் அருகாமையில் உள்ள காலி இடங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், டாஸ்மாக் கடை மற்றும் பார்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதையடுத்து பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.