பொங்கலூர்: பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளிக்காற்றும் சாரல் மழையும் பெய்தது. இதில், பொங்கலூர் அருகே கள்ளிப்பாளையம் அரசுப்பள்ளியில் கழிவறைக்கு செல்லும் இடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை யாரும் கவனிக்கவில்லை. மதிய உணவு இடைவேளையின் போது அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சங்கீதா(10) என்ற மாணவி, கழிவறைக்கு சென்றார். வழியில் அறுந்து கிடந்த மின் கம்பி கையில் லேசாக உரசியதில், ஷாக் அடிக்கவே பயந்துபோய் அலறினார். சத்தம் கேட்டு மாணவ மாணவிகள் ஓடிவந்தனர். மின்சாரம் தாக்கியதில் சங்கீதாவுக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.