சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கூறிய தனியார் மருத்துவமனைக்கு சீல் வைப்பு..!!

சென்னை: சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கூறிய தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள நடவடிக்கை செய்தியில், சென்னை மாவட்டம், கோடம்பாக்கம், ஆற்காடு ரோடு பகுதியில் அமைந்துள்ள Cadence மருத்துவமனையில் சட்ட விரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது மற்றும் உரிய அனுமயின்றி மனநோய் (Psychiatric) சார்ந்த சிகிச்சை மேற்கொள்வது தொடர்பான புகார் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 06.01.2024 அன்று பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் மற்றும் களத்தூர் ரவிகிருஷ்ணா ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மாநில அமலாக்க அலுவலர், PCPNDT ACT, 1994/TNCEA-1997 மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு. இரா.இளங்கோ மகேஸ்வரன், எம்.எஸ்., டி.சி.எச் ஆணைப்படி, இணை இயக்குநர் (சட்டம்) அவர்களின் தலைமையில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) மற்றும் தேசிய சுகாதார திட்ட மாவட்ட மனநல மருத்துவர், ஆகியோரைக்கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

விசாரணை குழுவினர் 02.05.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வில் மேற்காணும் மருத்துவமனையில் Scan பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும் மரு.முரளி உரிய அனுமதியின்றி Scan செய்ததும், மாதாந்திர அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததும், மேலும் கர்ப்பிணி பெண்களிடம் பெறக்கூடிய Form-F முறையாக பராமரிக்கப்படாததும் கண்டறியப்பட்டது. மேற்காணும் குறைபாடுகளைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட அமலாக்க அலுவலர், PCPNDT Act, 1994 அவர்களால் உரிய விளக்கம் கோரப்பட்டது.

17.05.2024-ம் நாளிட்ட Cadence மருத்துவமனையின் விளக்க கடிதமானது குறைபாடுகளுக்கு தொடர்பில்லாமலும் திருப்தியின்றியும் அமைந்தது. அதனைத் தொடர்ந்து விசாரணைக் குழுவானது 23.05.2024 அன்று Cadence மருத்துவமனையில் மீண்டும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் மருத்துவமனையில் நிர்வாகம் மேற்கொள்ள முறையான பணியாளர்கள் இல்லை என்பதும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம்- 1997 சட்டத்தின் கீழ், உரிய அனுமதி பெறாமல் மருத்துவர்கள் பணியாற்றியதும், மேலும் உரிய அனுமயின்றி கருக்கலைப்பு செய்வதும் மகளிர் நலன் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைகள் முறையான மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செய்யப்பட்டதும், அவசர காலங்களில் மயக்கவியல் நிபுணர், பொது நல மருத்துவர் மற்றும் அவசரகால மருத்துவர்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது.

மேற்காணும் மருத்துவமனை மனநல பாதுகாப்பு சட்டம் – 2017, அத்தியாயம் 10, பிரிவு-65(1)ன் கீழ் மனநல மருத்துவம் அளிக்க மாநில மனநல அலுவலர் அவர்களிடம் முறையான அனுமதி பெறாமல் மனநல சிகிச்சை மேற்கொண்டது கண்டறியப்பட்டது. மேலும், மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகளில் (Generator, Defibrillator and Ventilator in emergency department) குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்தும்) சட்டம், 1997 விதி 5(1)-ன் கீழ் பொது மக்களின் நலன் கருதி Cadence மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழை தற்காலிகமாக நீக்கம் (Temporary Cancellation) செய்து ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 23.05.2024 அன்று முதல் மருத்துவமனை மூடப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கூறிய தனியார் மருத்துவமனைக்கு சீல் வைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: