சென்னை: கடந்த 2015ல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து திரைக்கு வந்த படம், ‘டிமான்ட்டி காலனி’. ஹாரர் திரில்லர் கதை கொண்ட இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2வது பாகம் கடந்த 2024ல் வெளியானது. 2வது பாகத்தில் அருள்நிதி ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். தற்போது அதன் தொடர்ச்சியாக ‘டிமான்ட்டி காலனி 3’ உருவாகியுள்ளது. இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன், குரு சோமசுந்தரம் நடித்துள்ளனர்.
தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் 4வது பாகம் அஜய் ஞானமுத்து, அருள்நிதி கூட்டணியில் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அஜய் ஞானமுத்து அளித்த பேட்டியில், ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் கதை 6 பாகங்கள் வரை நீளும் என்று சொல்லியிருந்தார்.
