சொந்த ஊரில் தேவிஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி

இசை அமைப்பாளரும், பாடகருமான தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ என்ற தெலுங்கு படத்தை தில் ராஜூ வழங்க, வேணு யெல்தண்டி இயக்குகிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சிரீஷ் தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், தனது சொந்த ஊரான வேதுருபாகாவுக்கு சென்றிருந்த தேவிஸ்ரீ பிரசாத், அந்த ஊரின் பாரம்பரியம், உணர்வுகள் நிறைந்த திருவிழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது தந்தை பிறந்த கிராமம் வேதுருபாகா. எனது சிறுவயதில், சென்னையில் இருந்து என்னை அழைத்து வந்து, இயற்கை அழகை உணரச்செய்த ஊர் இது. நம்முடைய மக்களுடனும், கலாச்சாரத்துடனும் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த கிராமத்தில் ஒரு வீட்டை கட்டியிருக்கிறோம். கலாச்சாரம், நாட்டுப்புறக்கலை மற்றும் தெய்வீகத்தின் அழகை எனக்கு கற்றுத்தந்த இந்த ஊர், என்னை ‘எல்லம்மா’ படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தது’ என்றார்.

Related Stories: