மாமியாரை அழ வைத்த ராஷ்மிகா: பட விழாவில் சம்பவம்

ஐதராபாத்: ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் நடிப்புக்காக, தெலங்கானா அரசின் திரைப்பட விருது ராஷ்மிகாவிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற ராஷ்மிகா வந்த விதம் அனைவரையும் கவர்ந்தது. அவர் தனது கணவருடன் வருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், விஜய் தேவரகொண்டாவின் தாயார் மாதவி அதாவது தனது மாமியார் உடன் வந்திருந்தார் ராஷ்மிகா. திருமணத்திற்குப் பிறகு வந்த முதல் யுகாதி பண்டிகைக்கான பூஜையை முடித்த கையோடு அவர் இந்த விழாவிற்கு வந்திருந்தார். அவர் பேசும்போது, ‘‘ஒரு காலத்தில் எனது நடிப்பிற்காக நான் பல கேலிகளை சந்தித்தேன். ஆனால் இன்று அதே நடிப்பிற்காக மாநில அரசின் விருதை வென்றுள்ளேன். நான் நீண்ட தூரம் கடந்து வந்ததாக உணர்கிறேன்’’ என்றார்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர், திருமணத்திற்குப் பிறகு ராஷ்மிகா பெறும் முதல் விருது என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, தனது மாமியார் மாதவியை பார்த்து, ‘‘நான் உங்கள் மருமகளாக ஆவதற்கு முன்பே, நீங்கள் என்னை ஒரு மகளைப் போல நேசித்தீர்கள். இன்று உங்கள் முன்னால் அதிகாரப்பூர்வமாக மருமகளாக நிற்பதில் பெருமிதம் கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்றார். தொடர்ந்து தனது மாமியாரை நோக்கி ‘பாப்பலு’ என செல்லமாக அழைத்து, ‘‘நான் சாதித்துவிட்டேன். இனி நாம் வீட்டிற்குச் சென்று இதைக் கொண்டாடலாம்’’. என்று மகிழ்ச்சியுடன் கூறினார். ராஷ்மிகாவின் இந்த பேச்சையும் அவரின் அன்பான வார்த்தைகளையும் கேட்டு பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மாமியார் மாதவியின் கண்கள் கலங்கின. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories: