சென்னை: நடிகை நயன்தாரா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் முடித்தார். இவர்கள் இருவருக்கும் வாடகைத்தாய் மூலமாக இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். மேலும் சொந்தமாக படங்களை தயாரிக்கும் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா பதிவு செய்ததாக ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தபோது அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
வைரலான பதிவில், ‘‘குறைவான அறிவுடைய ஒருவரை நீங்கள் திருமணம் செய்தால் உங்கள் திருமணம் மிகப்பெரிய தவறாக மாறும். உங்கள் கணவருடைய செயல்பாடுகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல. என்னை விட்டு விடுங்கள். நான் ஏராளமான பிரச் னைகளை உங்களால் அனுபவித்து விட்டேன்’’ என்று அந்தப் பதிவு இடம்பெற்றிருந்தது. இது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த பதிவை ஏன் நயன்தாரா போட வேண்டும்? அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே பிரச்னையா? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதையொட்டி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.