திருமண தடை நீக்கும் லட்சுமி நரசிம்மர்

நடுநாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் தனித்துவம் கொண்டது. இந்த ஆலய கருவறைக்குள் ஸ்ரீ வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.

1800 ஆண்டுகள் பழமையான இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்து இருக்கும். காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசாந்தி பூஜை, 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால பூஜை, இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ராக்கால பூஜை நடைபெறும்.

இத்தலத்தில் ரூ.10 கட்டணம் செலுத்தி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யலாம். இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் இணைந்தபடி காட்சியளிக்கின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த பலர் இத்தல நரசிம்மரை குல தெய்வமாகக் கொண்டாடு கிறார்கள். எனவே தெலுங்கு வருடப் பிறப்பு இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல்-அமைச்சரின் அன்னதானத்திட்டம் இத்தலத்தில் செயல்படுத்தப்படுகிறது.

திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது. பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.

இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது. வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீ ரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார். இத்தலத்தின் புராண கால பெயர் பரகலா என்பதாகும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிகுடி ஆகிய மூன்று இடங்களில் உள்ள லட்சுமி நரசிம்மரை ஒரே நாளில் தரிசித்தால் கடன்பிரச்னை, குடும்ப பிரச்னைகள், அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பரிக்கலில் இருந்து பூவரசன்குப்பம் 39 கி.மீ தொலைவிலும், பூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிகுடி 26 கி.மீ தொலைவிலும் உள்ளது.

செல்வது எப்படி?

விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு செல்லலாம். பேருந்து வசதி உள்ளது.

Related Stories: