கல்விக் கடவுளரின் அற்புத தரிசனம்

கூத்தனூர்

திரிபுர சுந்தரியாகிய அம்பிகை நமக்காக ஏற்றுக்கொண்ட வடிவங்களில் சிறப்பாகப் போற்றப்படுபவை மூன்று: துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி. இவர்களில், தன்னை நாடி வரும் அடியார்க்கு தன் பேரருளை அள்ளி வழங்கும் பொருட்டு, கருணாகடாட்சியாய் எளிய திருக்கோலத்துடன் சரஸ்வதி வீற்றிருக்கும் இடம்தான் கூத்தனூர். திருவாரூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் பூந்தோட்டம் பஸ் நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூத்தனூர். இதற்கு ஹரிநாகேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. மாமன்னன் இரண்டாம் ராஜராஜன், தன் காலத்தில் அவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்கு இவ்வூரை பரிசாக வழங்கினான். அதனால் கூத்தன் ஊர் - ‘கூத்தனூர்’ எனப் பெயர் பெற்றது.  

தவம் செய்யும் முனிவர்கள் அமைதியை தேடி சென்றதை படிக்கிறோம். ஞான சொரூபமான தட்சிணாமூர்த்தியின் உருவமும் இதையே நமக்கு உணர்த்துகிறது. சரஸ்வதியும் அப்படி தவம் செய்ய கருதினாள். பூவுலகில் அமைதியும் அழகும் நிறைந்த ஓரிடத்தை தேர்ந்தெடுத்தாள். அந்த புண்ணிய தலம்தான் இன்றைய கூத்தனூர். அம்பாளின் ஊர் ஆதலால் ‘அம்பாள்புரி’ என்றும் அழைக்கப்படுகிறது. கவிச் சக்கரவர்த்தி எனப் பெயர் பெற்றவரான ஒட்டக் கூத்தர், வரகவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜித்தார். கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்று அமைத்தும், தட்சிண வாஹினியாய் ஓடும் ஹரிசொல் மாநதியின் நீரினால் அபிஷேகம் செய்தும், நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வரலானார்.

கூத்தனூரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள், தம் வாய் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவியாக்கினாள். இக் கலைமகளின் அருளைப் பெற்ற இன்னொரு பக்தனும் உண்டு. அவர் கும்பகோணத்தை சேர்ந்த சாரங்கபாணி தீட்சிதர். ஸ்ரீவித்யா உபாசகரும், காஞ்சி முனிவரால் அன்னதான பிரபு என அழைக்கப்பட்டவரும், பல தர்ம காரியங்களை முன்னின்று நடத்தியவருமான ஸ்ரீ ராமானந்த யதீந்திரர், சரஸ்வதியை வழிபட்டு 25 ஆண்டுகளுக்கு முன்பு மகாசமாதி அடைந்தார்கள். இத்தகு அருள்மிகு ஞான சரஸ்வதியின் திருக்கோலத்தை காணக் கண்கள் ஆயிரம் வேண்டும். லலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கராயர், ‘‘இவ்வம்பிகையின் எழிலுருவை கண்டு களிப்பதற்கு, முன்செய் புண்ணியம் வேண்டும்’’ என்கிறார்.

சரஸ்வதியின் வடிவத்தை தேவி மகாத்மியம் இவ்வாறு கூறுகிறது: ‘‘அசுரர்களை அழிக்க அம்பிகை எடுத்த உருவம் அது. ஆனால், தன் குழந்தைகளுக்கு ஞானப்பால் ஊட்ட திருவுள்ளம் கொண்டதால் அமைதியே சொரூபமாக கொண்டாள். வெள்ளுடை தரித்து, வெண்தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னை, இடக் கீழ்க் கையில் புத்தகமும், வலக் கீழ்க்கையில் சின் முத்திரையும், வல மேல் கையில் அட்சர மாலையும், இட மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி ஜடாமுடியுடன், துடி இடையும், கருணைபுரியும் இரு விழிகளும், ஞானசக்ஷுஸ் என்ற மூன்றாவது கண்ணும், புன்னகை தவழும் திருவாயுமாய் கிழக்கு முகமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள். அன்னையின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

செட்டிப் புண்ணியம்

அது 1848ம் வருடம். ஊரின் மையமாய் வரதராஜப் பெருமாள் அருட்குடி கொண்டிருந்தார். அவ்வூரைச் சேர்ந்த ராவ்சாகிப் ரங்காச்சார் ஸ்வாமி எனும் பரம

பக்தர் திருவஹிந்திரபுரம் தேவநாத ஸ்வாமி மீது பெரும் பக்தி பூண்டொழுகினார். யோகஹயக்ரீவர் மீது அளவிலா பிரேமை கொண்டார். தம் கிராமத்திற்கு தேவநாதப் பெருமாளையும், பரிமுகப் பெருமானையும் எழுந்தருளச்செய்ய வேண்டும் என பேரவா கொண்டார். திருவஹிந்திரபுரம் தேவஸ்தானத்தின் அனுமதியின் பேரில் 1848ம் வருடம், வைகாசி 22ம் தேதி  தேவநாதப் பெருமானின் உற்சவ விக்ரகத்தையும், வேதாந்த தேசிகர் ஆராதித்த யோக ஹயக்ரீவ மூர்த்தியையும் செட்டிப்புண்ணியத்திற்கு எழுந்தருளச் செய்தார்.

ஊர், கோலாகலமாய் வரவேற்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. எம்பெருமானின் அருள் மழையில் நனைந்தது. செட்டிப் புண்ணியம் செய்த புண்ணியம் என்னே என்று அருகிலுள்ள ஊர் மக்கள் வியந்தார்கள். எம்பெருமானை சேவித்தார்கள். இக்கோயிலில் வரதராஜப் பெருமாளும், தேவநாத ஸ்வாமியும், யோக ஹயக்ரீவரும் இன்றும் அருளாட்சி செய்துவருகிறார்கள். இங்குள்ள ஹயக்ரீவர் அருளால் கல்வி கேள்விகளில் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். ஞான மூர்த்தியான இவர், கல்வி ஞானத்தை வாரி வழங்குகிறார்.

இங்கு வந்து ஹயக்ரீவ பிரசாதமாய் கற்கண்டைப் பெற்றுக் கொண்டு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்போர் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும்.

தேர்வின்போது வேண்டிக்கொண்டு, எழுது கோலை ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து எடுத்துச் செல்லும் மாணவ, மாணவியர்களும் ஏராளம். செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள சிங்கப் பெருமாள் கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் ஹயக்ரீவர் ஆசி வழங்கத் தயாராக உள்ளார்.

வேதாரண்யம்

கல்யாண வீட்டின் குதூகலமும், கூட்டமும் மறைக்காட்டு மணாளனான வேதாரண்யேஸ்வரர் சந்நதியில் நிறைந்திருக்கிறது. லிங்கத் திருமேனியில் எழுந்தருளியுள்ளவரை பார்க்கும் போது உள்ளம் சிறகாகிறது. வெண்ணீற்றின் மணம் கடற் காற்றாக அவ்விடத்தை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. பிராகாரத்தை வலமாக வருகையில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். வேறெங்கும் காணமுடியாத, வீணையில்லாத கைகளில் சுவடியோடு வீற்றிருக்கிறார். இத்தலத்து உமையம்மையின் குரல் இவள் யாழைவிட இனிமையாக இருப்பதால் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள்.

அதனாலேயே அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. யாழைப் பழித்த மொழியம்மை எனும் திருப்பெயரை உச்சரிக்கும்போதே நெஞ்சில் அமுதூறுகிறது. யாழைப் பழித்த மொழி யாளின் விழிகள் கருணையை மழையாகப் பொழிகிறது. அவள் திருப்பெயர் போலவே வாழ்விலும் இனிமை கூட்டுகிறாள். இந்த பிரமாண்டமான கோயிலை அங்குலம் அங்குலமாக அனுபவித்து கொடி மரத்தின் கீழ் பரவி நிமிர மறைக்காடர் இதயத்தின் மத்தியில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறார்.

உத்தமர் கோயில்

உத்தமர் கோயிலில் ஒரே வளாகத்திற்குள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் புருஷோத்தமர் என்ற திருநாமத்தோடு திருமாலும், அவருக்கு நேர் பின்புறம் மேற்கு நோக்கி பிட்சாண்டார் என்ற திருநாமத்தில் சிவபெருமானும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இவர்களோடு நான்முகனான பிரம்மாவும், தேவி சரஸ்வதியோடு இங்கு அருள்பாலிப்பதால் இத்தலம் மும்மூர்த்தி தலமாக வழிபடப்படுகிறது. திருச்சி மாவட்டத் தலைநகரான திருச்சியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும், திருவரங்கத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ள பிட்சாண்டார் கோயில் என்ற உத்தமர் கோயில் திருமாலும், சிவபெருமானும் ஒரே ஆலய வளாகத்தில் எழுந்தருளியிருக்கின்ற அற்புதமான சிவ விஷ்ணு ஆலயமாகும்.

ஒவ்வொரு சிவாலயத்திலும் கருவறைக்கு வடகிழக்கே அமைந்துள்ள நவகிரக சந்நதியில் குருபகவான் அருள்பாலிக்கிறார். மேலும், கருவறையில் தென்புற கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியும் குருவாக வழிபடப்படுகிறார். தட்சிணாமூர்த்தி வடிவத்தில் 64 வகைகள் உள்ளதாக ஆகமநூல்கள் தெரிவிக்கின்றன. மேதா, ஞான, தாம்பத்ய, வீணா தட்சிணாமூர்த்தி போன்ற பல வடிவங்கள் உள்ளன.

திருப்பூந்துருத்தி

இத்தலத்தின் சிறப்பம்சமே இங்குள்ள வீணாதர தட்சிணாமூர்த்தியே ஆகும். ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தவர்களும், தேவர்களும், நாரதரும் வினவ பூந்துருத்திக்கு வருக எனப் பணித்தார். குருவும் எழுந்தருளி வீணையை ஏந்தி மீட்ட நாதத்தின் மையத்தோடு யாவரும் கலந்தனர். இக்கோலம் வேறெங்கும் காணமுடியாத அற்புதம். இசையில் தேர்ச்சிபெற இத்தல தட்சிணாமூர்த்தியை வணங்குவோர் பெரிதும் சாதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தலம் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

வேதபுரி

தேனி-மதுரை வழியில் 1 கி.மீ. தூரத்தில் உள்ள அரண்மனைப் புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ. சென்றால் வேதபுரியை அடையலாம். இங்கு பிரக்ஜா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

புதுச்சேரி ஹயக்ரீவர்

ஒரு சமயம் திருமாலின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளில் மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் தோன்றினர். திருமாலிடமிருந்து தோன்றிய தைரியத்தில், தாங்களே படைப்புத் தொழிலை புரிய ஆசைப்பட்டு, நான்முகனிடமிருந்து வேதங்களை அபகரித்து, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட திருமால் குதிரை முகத்துடன் தோன்றி அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு நான்முகனிடம் தந்தார். மது, கைடபரால் பெருமை இழந்த வேதங்களை, பரிமுகக் கடவுளாகிய ஹயக்ரீவர், உச்சி முகர்ந்து புனிதப்படுத்தினார்.

அந்த  மூச்சுக் காற்றால் வேதங்கள் புனிதம் பெற்றன. ஆனாலும் அசுரர்களுடன் போரிட்ட வேகத்தில் ஹயக்ரீவர் உக்ரமாக இருக்கவே, அதைத் தணிக்க திருமகள் அவரது மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தினாள். அந்த நிலையில் அவர் லட்சுமிஹயக்ரீவர் என வணங்கப்பட்டார். வேதங்களை மீட்டதால் இவர் கல்விக் கடவுளானார். அந்த ஹயக்ரீவருக்கு புதுச்சேரியில் ஒரு ஆலயம் உள்ளது. மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்திய திருக்கோலத்தில் அவர் சேவை சாதிக்கிறார்.

கருவறையில் ஹயக்ரீவ மூர்த்தியின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை எம்பிரானையும் அணைத்த வண்ணம் உள்ளன. கல்விக்குரிய கடவுள்களில் ஹயக்ரீவ மூர்த்தி எனும் பரிமுகக் கடவுள் வழிபாடு, தொன்மையானது. படிப்பில் மந்தமாக உள்ளவர்களும் பேச்சுத் திறன் குறை உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து பெருமாளை தரிசித்து அக்குறைகள் நீங்கப்பெறுகின்றனர். புதுச்சேரி முத்தியால்பேட்டையில், ராமகிருஷ்ணா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

அம்மன்குடி

மகிஷாசூரனை கொன்று பெரும் வதம் முடித்த துர்க்கா தேவி நானிலமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ அது கங்கையாகப் பொங்கியது. தேவி தியானத்தில் அமர்ந்ததால் இத்தலத்தை ‘தேவி தபோவனம்’ என அழைத்தனர். ராஜராஜசோழனின் படைத் தலைவரான கிருஷ்ணன் ராமனான பிரம்மராயரின் சொந்த ஊர் இதுவேயாகும். அம்மன்குடி கோயில் கட்டி அதற்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாகக்கூட வரலாறு உண்டு.

அம்மனின் வாயிலில் மிக அபூர்வமான ஒரு சரஸ்வதியின் சிலை உள்ளது. கண்கள் மூடி, கைகளில் ஜபமாலையோடு வீற்றிருக்கும் கோலம் காணுவதற்கு அரியதாகும். நவராத்திரியில் பிரதம நாயகியான லக்ஷ்மி துர்க்காவோடு தானும் தவத்தில் ஆழ்கிறாளோ என்று தோன்றுகிறது. இத்தலம்

கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் -உப்பிலியப்பன் கோயில்-அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும் இக்கோயிலை அடையலாம்.

தொகுப்பு: கார்த்திக்

Related Stories: