விதார்த், டெல்னா டேவிஸ் நடிப்பில் வெளியான ‘குரங்கு பொம்மை’ என்ற படத்தை எழுதி இயக்கிய நித்திலன் சாமிநாதன், அடுத்து விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, அபிராமி, சிங்கம்புலி, திவ்யபாரதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ என்ற படத்தை எழுதி இயக்கினார். இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டினர். தற்போது புரி ஜெகன்நாத் இயக்கதில் ‘ஸ்லம் டாக்’, பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஒரு படம், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘பாக்கெட் நாவல்’, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றை கைவசம் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘மகாராஜா 2’ படம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருவதை குறிப்பிட்டு பேசிய விஜய் சேதுபதி, ‘தற்போது ‘மகாராஜா 2’ படத்துக்கான கதையை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் எழுதி முடித்துள்ளார். இப்போது வரை அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று சத்தியமாக எனக்கு தெரியாது. ஆனால், அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதை கேட்க, ரசிகர்களை போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார். இதை வைத்து பார்க்கும்போது, விரைவில் ‘மகாராஜா 2’ படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. நயன்தாரா நடிப்பில் ‘மகாராணி’ என்ற படத்தை இயக்குவதாக வெளியான தகவல் என்ன ஆனது என்பது பற்றி நித்திலன் சாமிநாதன் வாய் திறக்கவில்லை.
