மேட்டூரில் பயங்கர சம்பவம் சிறுவனை அடித்துக்கொன்று 16 கண் மதகு பாலத்தில் வீச்சு

*நண்பனுக்காக தீர்த்துக்கட்டிய கும்பல்*வாலிபர் கைது; ‘திடுக்’ வாக்குமூலம்மேட்டூர் : மேட்டூர் அருகே நண்பனை மிரட்டிய சிறுவனை அடித்து கொலை செய்து, ஆற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான 5 பேரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கோவிந்தபாடியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் பொக்கிஷ்(17), பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால், டுடோரியல் சென்று படித்து வந்தான். மற்ற நேரங்களில் வெல்டிங் வேலைக்கு சென்று வந்தான். கருமலைக்கூடலில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்த பொக்கிஷ், கடந்த 27ம் தேதி வீட்டிலிருந்து சென்றவன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவனது மாமா வடிவேல்  அளித்த புகாரின் பேரில், கருமலைக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், கருமலைக்கூடலை சேர்ந்த ஆனந்த் என்பவரை, வழிப்பறி வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், காணாமல் போன பொக்கிஷை அடித்துக் கொலை செய்து காவிரியில் வீசியதாக, அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.இதையடுத்து, அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஆனந்த் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த வெல்டர் கவின் என்பவரது தாயை, பொக்கிஷ் பழித்துப் பேசியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், கவின் தன்னை அடித்ததால், ஆத்திரம் அடைந்த பொக்கிஷ், குஞ்சாண்டியூரைச் சேர்ந்த கார்த்தியை அழைத்துக்கொண்டு, மேட்டூருக்கு சென்று கவினை மிரட்டி உள்ளார். அப்போது, கவினுடன் இருந்த ரவிச்சந்திரன் என்பவர், தனது நண்பர் ஆனந்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, அங்கு சென்ற ஆனந்த், தனது நண்பர்களுடன் சேர்ந்து பொக்கிஷையும், கார்த்தியையும் அடித்துள்ளனர். பின்னர், கார்த்தியை அனுப்பி விட்டு, பொக்கிஷை மேட்டூர் 16 கண் மதகு அருகே உள்ள பாலத்திற்கு அழைத்துச் சென்று, சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அவர் இறந்ததால், உபரிநீர் கால்வாயில் சடலத்தை வீசி விட்டு திரும்பினர். இவ்வாறு ஆனந்த் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த கொலையில் தொடர்புடைய ரவிச்சந்திரன், ஏற்கனவே வழிப்பறி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இதில் தொடர்புடைய புதுச்சாம்பள்ளி தெப்பக்குளத்தை சேர்ந்த கார்த்தி, சதீஷ், பெரியார் நகரை சேர்ந்த மகேந்திரன், கார்த்தியின் அண்ணன் கோகுல்ராஜ், தினேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும், பொக்கிஷின் சடலத்தை போலீசார் தேடி வருகிறார்கள். வாலிபரை அடித்துக் கொலை செய்து, காவிரியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

The post மேட்டூரில் பயங்கர சம்பவம் சிறுவனை அடித்துக்கொன்று 16 கண் மதகு பாலத்தில் வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: