பெண்களின் கேரக்டர்கள் வலிமையாக இருக்கும்: ‘ரணம்’ பற்றி வைபவ்

 

சென்னை: ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, தாஸ் ரவி நடித்துள்ள படம், ‘ரணம்: அறம் தவறேல்’. பாலாஜி கே.ராஜா ஒளிப்பதிவு செய்ய, அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். மிதுன் மித்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மது நாகராஜ் தயாரித்துள்ளார். வரும் 23ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து வைபவ் கூறியதாவது: இது நான் நடிக்கும் 25வது படம். அதற்குள் இத்தனை படங்களில் நடித்துவிட்டேனா என்று ஆச்சரியமாக இருக்கிறது. சரஸ் மேனன் ஏற்றுள்ள கேரக்டரில் நடிக்க பலர் மறுத்தனர். அவரை ஷெரீஃப் எப்படி நடிக்க வைத்தார் என்று தெரியவில்லை. போலீஸ் கேரக்டரில் தான்யா ஹோப் சிறப்பாக நடித்துள்ளார். குறும்படம் இயக்கிவிட்டு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இயக்குனர்களைப் போல் ஷெரீஃப் கண்டிப்பாக புகழ்பெறுவார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி ராஜாவின் பெயரை திரையில் பார்க்க ஆசைப்பட்ட அவரது மனைவி இன்று உயிருடன் இல்லை. இப்படத்தில் பெண்களின் கேரக்டர்கள் மிக வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளன. உலகில் இப்படி எல்லாம் நடக்குமா என்று, இப்படத்தின் கதையை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். குற்றச்சம்பவங்களில் துப்புதுலக்கும் புலனாய்வு காவல்துறையினருக்கு உதவும் முக புனரமைப்பு ஓவியக்கலைஞன் வேடத்தில் நடித்துள்ளேன். அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கோட்’ படத்தில் நடிக்கிறேன். ஏற்கனவே அஜித் குமார் படத்திலும், இப்போது விஜய் படத்திலும் நடித்ததை நினைத்து மகிழ்ச்சி. 69வது படத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று விஜய் சொல்லிவிட்டார். அதற்கு முன்பு அவரது 68வது படத்தில் நடித்து முடித்துவிட்டேன்.

The post பெண்களின் கேரக்டர்கள் வலிமையாக இருக்கும்: ‘ரணம்’ பற்றி வைபவ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: