துண்டை காணோம் துணியை காணோம்னு ஓட வைப்பேன்; எந்த ஆணையம் வந்தாலும் கவலையில்லை: நடிகர் சங்கத்துக்கு மன்சூர் அலிகான் மிரட்டல்

சென்னை: திரிஷா பற்றி ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மன்சூர் அலிகான் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது. அதே போல், நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது: கதாயநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறித்துதான் பேசினேன்.

நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. நான் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்பது அவர்களுக்கு தெரியும். என்னிடம் கேள்வி எதையும் நடிகர் சங்கம் கேட்கவில்லை. போனிலும் பேசவில்லை. நோட்டீஸ் அனுப்பி இந்த மாதிரி விளக்கம் கொடுங்க என்று கேட்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஒரு சங்கம் நடத்துகிறவர்கள் இப்படி செய்யலாமா? நான்கு மணி நேரம் நடிகர் சங்கத்திற்கு நான் டைம் கொடுக்கிறேன். நான் மன்னிப்பு கேட்பவன் இல்லை. நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலய தவறை செய்துள்ளது.

நான் அமைதி காத்துக் கொண்டு இருக்கிறேன். எரிமலையாக குமுறினேன் என்றால் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கோவணத்தை உருவி விட்றுவேன். எல்லாம் ஓடிப் போய்விடுவீர்கள். என்னை பலிகடா ஆக்கிவிட்டு நல்ல பெயரை எடுக்க பார்க்கிறீர்களா? இது என்ன நியாயம். நடிகர் சங்கம் என ஒரு சங்கம் இருந்தால் குறைந்தபட்சம் விளக்கம் கேட்க வேண்டாமா? மக்களுக்கு என்னைப்பற்றி தெரியும். நான் யார் என்பது அவர்களுக்கு தெரியும். பொண்ணு, மாப்பிள்ளை மாதிரி எல்லா பேப்பரிலும் எங்க போட்டோ போட்டு இருக்கிறார்கள்.

அந்த அம்மாவை (திரிஷா) விட நான் நல்லாகத்தான் இதில் இருக்கிறேன். இந்த பிரச்னை ஹாலிவுட் வரைக்கும் போய்விட்டது. அந்த வகையில் எனக்கு சந்தோஷம் தான். நடிகர் சங்கம் விசாரணைசெய்யாமல் செய்தது இமாலய தவறு. சினிமாவில் கொலை செய்கிறார்கள் என்றால் நிஜமாகவா கொலை செய்கிறார்கள்.? சினிமாவில் ரேப் என்றால் நிஜமாக செய்வதா? அறிவு இருக்கிறதா? சங்கத்திற்கு அறிவு இல்லையா? தமிழ்நாடே என் பக்கம் உள்ளது.

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம்நான் பயப்பட மாட்டேன். எந்த ஆணையமும்வரட்டும்.அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. நான் கலைஞர்களை இழுக்காக பேசுகிறவன் இல்லை. அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடியவன். திரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். திரிஷா குறித்து நான் தவறாகவே பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post துண்டை காணோம் துணியை காணோம்னு ஓட வைப்பேன்; எந்த ஆணையம் வந்தாலும் கவலையில்லை: நடிகர் சங்கத்துக்கு மன்சூர் அலிகான் மிரட்டல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: