50வது படம் மகாராஜா விஜய் சேதுபதி உருக்கம்

சென்னை: ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் 50வது படமாக ‘மகாராஜா’ உருவாகி வருகிறது. பேஷன் ஸ்டுடியோஸ் சுதன், தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில், இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஜய்சேதுபதி பேசியதாவது: என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்துக்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கு நன்றி. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்.

அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. அனுராக் சாரின் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆனால் இந்த படத்திற்காக அவர் செய்த வேலை மிக பெரியது. நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார். பட ஹீரோயின் மம்தா மோகன்தாஸ் பேசும்போது, ‘நான் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். இது ஒரு ரிவேஞ் ஸ்டோரி தான்.

அனுராக் மற்றும் விஜய் சேதுபதி சாருக்கும் இடையே கதை நடக்கும். படம் நான் இன்னும் முழுதாக பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் அருமையான விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாக ‘மகாராஜா’ தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு படமாக அமையும்’ என்றார்.நடிகர் நட்டி, நடிகை அபிராமி, இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத், ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், எடிட்டர் ஃபிலோமின் ராஜ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, லலித்குமார், கார்த்திகேயன் சந்தானம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post 50வது படம் மகாராஜா விஜய் சேதுபதி உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: