ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்

புதுடெல்லி: தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு மற்றும் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘‘ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு உடனடியாக விசாரிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது. பல்வேறு முக்கிய மனுக்கள் தொடர் விசாரணையில் இருந்து வருகிறது. இருப்பினும் ஆலை தொடர்பான மனு வரும் 15ம் தேதி உத்தேச பட்டியலில் இருக்கிறது. அது இறுதி பட்டியலில் இடம்பெறும் பட்சத்தில் கண்டிப்பாக அன்றைய தினம் விசாரிக்கப்படும்’’ என தெரிவித்தனர். வேதாந்தா நிறுவனத்தின் இதே கோரிக்கையை கடந்த ஜனவரி 20ம் தேதியும் உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது….

The post ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: