சினிமாவில் துயரங்களை அனுபவிக்கும் உதவி இயக்குனர்கள்: சஞ்சிதா ஷெட்டி வருத்தம்

சென்னை: பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘அழகிய கண்ணே’. இயக்குனர் சீனு ராமசாமியின் தம்பி ஆர்.விஜயக்குமார் இயக்கியுள்ளார் இப்படத்தில் லியோ சிவகுமார் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 23ம் தேதி வெளிவருகிறது.

படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது: நான் சினிமாவுக்கு வந்து 16 வருடங்கள் ஆகிறது. தமிழ் மக்கள் எனக்கு நிறைய ஆதரவு தந்திருக்கிறார்கள். நான் புதிய இயக்குனர்கள், புதிய நடிகர்களுடன் நடித்தால் அந்த படம் வெற்றி பெறும் என்கிற செண்டிமென்ட் இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்திலும் புது இயக்குனர், புது நடிகர்தான் எனவே இந்த படமும் வெற்றி பெறும். நான் அதிகமாக நடித்தது புதிய இயக்குனர்களின் படத்தில்தான். 15 புதிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறேன்.

இந்த படத்தில் நான் கல்லூரி மாணவி, ஐடியில் வேலை செய்யும் பெண், காதலி, மனைவி, ஒரு குழந்தைக்கு தாய் என்கிற பல்வேறு பரிமாணங்களில் நடித்திருக்கிறேன். சினிமா இயக்குனராகும் கனவுடன் சென்னைக்கு வரும் காதலனுக்கு ஒரு பெண்ணாக என்னவெல்லாம் உதவி செய்ய முடியுமோ அதை செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறேன். இயக்குனர் விஜயகுமார் உதவி இயக்குனராக இருந்தபோது கிடைத்த அனுபவங்களை கொண்டுதான் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

ஒரு நடிகையாக படத்தில் நடிக்கும்போது நெருக்கமான நண்பர்களாகிறவர்கள் உதவி இயக்குனர்கள். அப்படி நண்பர்களாகும்போது அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை பற்றி சொல்லும்போதுதான் உதவி இயக்குனர்கள் படும் துயரம் தெரியவரும். இப்போது பெரிய இயக்குனர்களாக இருப்பவர்களும் இந்த துயரங்களை கடந்து வந்தவர்கள்தான். சினிமாவில் அதிக துயரங்களை அனுபவிப்பவர்கள் உதவி இயக்குனர்கள். அவர்களின் வாழ்க்கையை பேசுகிற படமாக இது உருவாகி உள்ளது.

The post சினிமாவில் துயரங்களை அனுபவிக்கும் உதவி இயக்குனர்கள்: சஞ்சிதா ஷெட்டி வருத்தம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: