மீண்டும் தமிழகம் வர இருக்கிறார்; பாஜ கூட்டணி குறித்து அமித்ஷா முடிவு செய்வார்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

திருவண்ணாமலை: விரைவில் மீண்டும் தமிழகம் வர இருக்கும் அமித்ஷா பாஜ கூட்டணி குறித்து முடிவு செய்வார் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். சம்மந்த விநாயகர் சன்னதியில் தரிசனம் செய்த அவர், பின்னர் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தார். அவருக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டி:
மதுரையில் நாளை (இன்று) நடைபெறும் முருகன் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்கின்றனர். அதையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆன்மிகத்திற்கு முக்கியமான நாளாக இந்த மாநாடு அமையும். பாஜ கூட்டணி குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜவின் தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள். அதற்காக, அமைச்சர் அமித்ஷா மீண்டும் விரைவில் தமிழ்நாடு வர இருக்கிறார்.

கூட்டணி தொடர்பாக நேரடியாக அவர் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் ரயில் பாதை திட்டங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. அம்ரித் பாரத் திட்டத்தில் 75 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. 9 புதிய ரயில் பாதை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மீண்டும் தமிழகம் வர இருக்கிறார்; பாஜ கூட்டணி குறித்து அமித்ஷா முடிவு செய்வார்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: