உணவு சாப்பிட இயற்கை உபாதை கழிக்க செல்ல அனுமதிப்பது சாத்தியமில்லை: ஓட்டுநர்களுக்கு ரயில்வே கொடுத்த‘ஷாக்’

சென்னை: சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்கள் ரயில்களை இயக்கி வருகின்றனர். இப்படி இயக்கும்போது ரயில் இன்ஜினில் கழிவறை இல்லாததால் ரயில் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் பெண் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது இடைநில்லா ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பெண் ரயில் ஓட்டுநர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் இந்த பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ரயில் ஓட்டுநர்கள் இயற்கை உபாதைகளை கழிக்காததால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். கழிப்பறை இல்லாததால் சிறுநீர் கழிக்க முடியாது என்ற அச்சத்தில் ஓட்டுனர்கள் போதிய தண்ணீர் எடுத்துக் கொள்ளாததால் சிறுநீரக பிரச்னை ஏற்படுகிறது. வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல் பிரச்னைகள் முன்னதாகவே வர வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன.
ரயில் ஓட்டுநர்களுக்கு சிக்னல்கள் மிக முக்கியமானது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில் 33 நொடிகளுக்கு ஒரு சிக்னலை கடந்து செல்கிறது. ஆனால் மன அழுத்தம் காரணமாக ஓட்டுனர்கள் அந்த சிக்னல்களை தவற விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதுகுறித்து ஐசிஎப் பொறியாளரும், ஐசிஎப் அகில இந்திய பொதுச்செயலாருமான ரமேஷ் தெரிவித்தாவது: 2024ம் ஆண்டு முதல் தயாரிக்கப்படும் அனைத்து ரயில் இன்ஜின்களிலும் தண்ணீரற்ற சிறுநீர் கழிப்பறை அமைக்கப்படுகிறது. இவை வருடத்திற்கு 600 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தயாரிக்கப்படும் ரயில இன்ஜின்களில் கழிப்பறை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பஞ்சாப், வாரணாசி, கொல்கத்தாவில் உள்ள ரயில் தொழிற்சாலையில் பணிகள் நடந்து வருகிறது என்றார்.

ஆனால், இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. பல முறை இதுகுறித்து ரயில் ஓட்டுநர்கள் வலியுறுத்தியும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. ரயில் ஒட்டுநர்கள் இயற்கை உபாதை கழிக்க இடைவேளை கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். அதே சமயம் தெற்கு ரயில்வே பொறுத்தவரை வெறும் 10% ரயில் இன்ஜின்களில் கூட கழிப்பறை வசதி இல்லை.

இந்நிலையில், ரயில் ஓட்டுநர்களுக்கு உணவு உட்கொள்ளவும், இயற்கை உபாதைகள் நிமித்தமாகச் செல்லவும் இடைவேளை வழங்க சட்டமியற்றுவது செயல்பாட்டு ரீதியாக சாத்தியமில்லை என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ரயில் விபத்துகள் நிகழாமல் தடுக்க இதுவும் முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ரயில் ஓட்டுநர்களின் இந்த கோரிக்கையை இந்திய ரயில்வே நிராகரித்துள்ளது.

ரயில் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் ரயில் சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ரயில்வே வாரியத்தின் 5 நிர்வாக இயக்குநர்கள், ரயில்வேயின் ஆராய்ச்சிப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பின் 5 நிர்வாகக் குழுவினர் ஆகியோர் இதில் பங்குபெற்று, தங்கள் பரிந்துரைகளை ரயில்வே வாரியத்துக்கு வழங்கி உள்ளனர்.

 

The post உணவு சாப்பிட இயற்கை உபாதை கழிக்க செல்ல அனுமதிப்பது சாத்தியமில்லை: ஓட்டுநர்களுக்கு ரயில்வே கொடுத்த‘ஷாக்’ appeared first on Dinakaran.

Related Stories: