சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும்: உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

சென்னை: சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் இடியாப்பம் சரியாக தயாரிக்காமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இனி இடியாப்பம் விற்பவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத்துறை உரிமத்தை பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட வேண்டும் அதனை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆண்டுக்கு ஒருமுறை உணவு பாதுகாப்புத்துறை உரிமம் புதுப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இடியாப்பம் தயாரிக்கும் போது பாதுகாப்பாகவும், தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும், காய்ச்சல், நோய் தொற்று பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் இந்த விற்பனையில் ஈடுபட வேண்டாம், இடியாப்பம் விற்பனையாளர்கள் காய்ச்சல் உள்ளிட்ட எந்த ஒரு பாதிப்புகளும் இல்லாமல் இடியாப்பத்தை விற்பனை செய்து கொள்ளலாம் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: