அதிபர் டிரம்பின் செயல்பாடுகளை கண்டித்து 1200 நகரங்களில் அமெரிக்கர்கள் போராட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். பல வெளிநாடுகளுக்கான நிதியை குறைத்ததுடன், யுஎஸ் எய்டு மூலம் பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தம், அதில் பணிபுரிந்த ஊழியர்களை நீக்குவது என அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் பரிந்துரையின்படி அரசாங்கத்தின் சில துறைகள் கலைப்பு, ஊழியர்கள் குறைப்பு என நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது பரஸ்பர வரி விகிதம் என கூறி அதிக வரிவிதித்துள்ளார். அதிபர் டிரம்புக்கு எதிராக அந்த நாட்டின் 50 மாகாணங்களில் உள்ள 1,200 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில், மனித உரிமைகள் அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம், பேரணிகளை நடத்தினர்.

கைகளை விடுங்கள் என்ற கோஷங்களை எழுப்பி மக்கள் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய வரி திட்டம் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விமர்சித்துள்ளனர். எலான் மஸ்கின் நடவடிக்கைக்கும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாஷிங்டனிலும், புளோரிடாவிலும் சுமார் 5 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

The post அதிபர் டிரம்பின் செயல்பாடுகளை கண்டித்து 1200 நகரங்களில் அமெரிக்கர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: