வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

கராகஸ்: அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவியிலிருந்து அகற்றி, அவரை நாடு கடத்திய நிலையில், புதிய ஆட்சி அமையும் வரை வெனிசுலா நாட்டின் நிர்வாகத்தை அமெரிக்கா கவனித்துக் கொள்ளும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகசில் ராணுவ தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமெரிக்க விமானப்படை நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் திடீர் தாக்குதல் நடத்தியது.

அதைத் தொடர்ந்து, பதுங்கு குழியில் ஒளிந்திருந்த அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரசை அமெரிக்க வீரர்கள் கைது செய்தனர். அமெரிக்காவுக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்காக மதுரோவை கைது செய்ய இந்த அதிரடி ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவியை போர்க்கப்பல் மூலம் அழைத்து வந்த அமெரிக்க படையினர் பின்னர் விமானம் மூலம் நேற்று நியூயார்க்குக்கு அழைத்து வந்தனர். இந்த அத்தனை நிகழ்வுகளையும் புளோரிடோவில் மார் ஏ லாகோ பண்ணை வீட்டில் இருந்தபடி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக பார்த்து ரசித்தார். இதைத் தொடர்ந்து, மார் ஏ லாகோவில் செய்தியாளர்களை சந்தித்து டிரம்ப் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார்.

அதில் டிரம்ப், ‘‘வெனிசுலாவில் முறையான அதிகார மாற்றம் ஏற்படும் வரையிலும் அமெரிக்கா நிர்வகிக்கும். இதை மதுரோவின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவருடன் ஒருங்கிணைந்து செய்யப்படலாம். இதற்கு, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் சரியான நபராக இருப்பார் என கருதுகிறோம். வெனிசுலாவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய அவர் அடிப்படையில் தயாராக இருக்கிறார். அவர் மிகவும் கண்ணியமானவர் என நான் நினைக்கிறேன்.

வெனிசுலாவின் எண்ணெய் கட்டமைப்புகள் சேமதடைந்துள்ளன. அமெரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்படும். வெனிசுலா எண்ணெய் வளம் மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும். தேவைப்பட்டால் வெனிசுலா மீது 2வது தாக்குதல் நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்’’ என்றார்.

இதற்கிடையே, வெனிசுலா அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் பதவி காலியானதும் ஒருமாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அதுவரை துணை அதிபர் தற்காலிகமாக பொறுப்பேற்க வேண்டும். அதன்படி, 2018 முதல் துணை அதிபராக உள்ள ரோட்ரிக்ஸ் பொறுப்பேற்க வெனிசுலா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை.

ரோட்ரிக்ஸ் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது துணை அதிபராக மட்டுமே அவரது பெயர் குறிப்பிடப்பட்டது. அந்த உரையில் மதுரோ மட்டுமே அதிபர் என்று கூறிய அவர் அமெரிக்காவை கடுமையாக தாக்கிப் பேசினார். அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியப் போவதில்லை என்று சபதம் செய்தார். இதே போல, பல்வேறு அமைச்சர்களும் மதுரோவின் ஆதரவாளர்களாகவே உள்ளனர்.

எனவே, நாடு யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியாமல் வெனிசுலா மக்கள் பதற்றத்தில் உள்ளனர். அசாதாரண சூழல் நிலவுவதால் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைப்பதில் மக்கள் தீவிரமாக உள்ளனர். இதனால் பல கடைகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. பல பகுதிகளில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

அதே போல, அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றி வேறொரு நாட்டின் மீது அதிபர் டிரம்ப் ராணுவ நடவடிக்கை எடுத்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கையை அதிபர் தன்னிச்சையாக செய்ய முடியாது என்பதால் அமெரிக்காவிலும் இது சட்டப்பிரச்னையை உருவாக்கி உள்ளது.

வெனிசுலாவின் கோரிக்கையை ஏற்று மதுரோ விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் இன்று கூட உள்ளது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு உலகின் பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே வெனிசுலா விவகாரம் மிகப்பெரிய சிக்கலான விவகாரமாக மாறி உள்ளது.

* ஆதரவும், எதிர்ப்பும்
அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதை, அமெரிக்காவில் வசிக்கும் வெனிசுலா மக்கள் வரவேற்று கொண்டாடினர். தெற்கு புளோரிடாவில் மியாமியில் உள்ள டோராலில் வெனிசுலா மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்கள் தாய்நாட்டு கொடியேந்தி தெருக்களில் பேரணியாக சென்றபடி சுதந்திரம், சுதந்திரம் என முழக்கமிட்டனர். 2014க்குப் பிறகு, மதுரோ ஆட்சியால் அதிருப்தி அடைந்து சுமார் 80 லட்சம் வெனிசுலா மக்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்கள் இனி மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம், வெனிசுலா மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு போராட்டங்களும் நடந்து வருகின்றன. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடந்த போராட்டத்தில் அமெரிக்க கொடி தீ வைத்து எரிக்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், ஸ்பெயினின் பார்சிலோனா, பிரேசிலின் சா பாலோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரங்களில் அமெரிக்காவுக்கும், அதிபர் டிரம்புக்கும் எதிராக போராட்டங்கள் நடந்தன. வெள்ளை மாளிகைக்கு முன்பாகவும் போராட்டக்கார்கள் கூடி டிரம்ப் நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர்.

* நியூயார்க் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்?
கைதான வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் இருவரும் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரோ மீது கடந்த 2020ம் ஆண்டிலேயே போதைப்பொருள் பயங்கரவாத சதி, கொகைன் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான கருவிகளை வைத்திருத்தல் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் கடத்தல் சதி போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரது மனைவி புளோரஸ் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், கடந்த கிறிஸ்துமசுக்கு முன்பாக ரகசியமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதற்காக பல்லாயிரம் கோடி கமிஷன் பெற்றதாக புளோரஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

* வெனிசுலா பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
வெனிசுலாவில் நடக்கும் சம்பவங்களை கருத்தில் கொண்டு, அந்நாட்டிற்கான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டுமென கடுமையாக அறிவுறுத்தப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மேலும், வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, கராகசில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. கராகசில் உள்ள இந்திய தூதரகத்தின் புள்ளிவிவரங்களின்படி, வெனிசுலாவில் சுமார் 50 வெளிநாடு வாழ் இந்தியர்களும், 30 இந்திய வம்சாவளியினரும் உள்ளனர்.

* விடுவிக்க வேண்டும் சீனா வலியுறுத்தல்
சீன வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமெரிக்காவின் செயல் சர்வதேச சட்டம், ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை அப்பட்டமாக மீறுவதாகும். எனவே மதுரோ மற்றும் அவரது மனைவியை உடனடியாக அமெரிக்கா விடுவிக்க வேண்டும்’’ என கூறி உள்ளது.

* இந்தியா கவலை
வெனிசுலா விவகாரத்தில் இந்தியா முதல் முறையாக நேற்று கருத்து தெரிவித்தது. இதுதொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘‘வெனிசுலாவில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலைக்குரியவை. நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

வெனிசுலா மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து, சம்மந்தப்பட்ட அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: