இதையடுத்து விடுமுறையில் இருந்த மலையரசன், கடந்த 18ம் தேதி டூவீலரில் மதுரைக்கு வந்தார். அங்கு திடீரென மாயமானார். அன்று மாலை மதுரை விமான நிலையம் அருகே ஈச்சனேரி, கிளாங்குளம் கண்மாய் கழுங்கிற்கு செல்லும் சாலையில் எரிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது. பெருங்குடி போலீசார் கொலை வழக்குப்பதிந்து செல்போன், சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரித்தனர். மதுரை எஸ்பி அரவிந்த் உத்தரவின்பேரில் 2 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மதுரை ரிங்ரோட்டில் நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூவேந்திரன், போலீஸ்காரர் மலையரசனை, ஆட்டோவில் ஏற்றிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மூவேந்திரனை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்து நீண்ட நேரம் விசாரித்தனர். பின்னர் நேற்று அதிகாலை 2 மணியளவில், மலையரசன் கொலையான இடத்திற்கு சிறப்பு தனிப்படையினர் அவரை அழைத்துச்சென்றனர். அங்கு கொலை செய்தது எப்படி என மூவேந்திரன் போலீசாரிடம் நடித்துக் காட்டினார். அப்போது திடீரென மூவேந்திரன் எஸ்ஐ மாரிக்கண்ணனை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.
* கடன் தர மறுத்ததால் நண்பரை கொன்ற அவலம்
மூவேந்திரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் வருமாறு: மூவேந்திரனும், மலையரசனும் நண்பர்கள். மலையரசன் மதுரைக்கு வரும்போது மூவேந்திரனுடன் ஆட்டோவில் சென்று மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று அவனியாபுரம் ரிங்ரோடு பகுதியில் சாலையோரம் அமர்ந்து இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மூவேந்திரன், மலையரசனிடம் பணம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மூவேந்திரன் இரும்பு கம்பியால் மலையரசனின் பின்தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மூவேந்திரன் ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்து மலையரசனின் உடலை எரித்து ஈச்சனேரி பகுதி கண்மாய் பகுதியில் வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
* போலீஸ்காரர் ஜிபே மூலம் ரூ.80 ஆயிரம் பட்டுவாடா
மதுரை எஸ்பி அரவிந்த் கூறுகையில், ‘‘கொலையான காவலர் மலையரசன், மனைவியை ரிங்ரோட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தபோது மூவேந்திரனின் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மூவேந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழந்துள்ளார். இதனால் அவருக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இருவரும் மது அருந்தும் போது மலையரசன், தனது மனைவியும் இறந்து விட்டார். தன்னிடம் நிறைய பணம் இருப்பதாக கூறியுள்ளார். மூவேந்திரனுக்கும் பணம் செலவழித்துள்ளார். அவரின் ஜிபே பாஸ்வேர்டையும் மூவேந்திரன் தெரிந்து கொண்டார். ரிங்ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டல் பின்புறம் கிளாங்குளம் கண்மாய் கழுங்கிற்கு இருவரும் ஆட்டோவில் சென்று மது அருந்தியுள்ளனர்.
போதையின் உச்சத்திற்கு மலையரசன் சென்றதும், அவரை தாக்கி கொன்று, தீ வைத்து எரித்து விட்டு செல்போனை எடுத்துச் சென்று விட்டார். அதில் ஜிபே மூலம் இருவருக்கு தலா ரூ.40 ஆயிரம் என ரூ.80 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். இதற்கிடையில் கொலை சம்பவம் தெரிந்த மூவேந்திரனின் நண்பரான முத்துப்பட்டி தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவா(25) என்பவர், மூவேந்திரனிடம் ரூ.30 ஆயிரம் கொடு. இல்லையென்றால் போலீசில் சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து ரூ.30 ஆயிரத்தை சிவாவுக்கு மூவேந்திரன் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்’’ என்றார்.
The post சிவகங்கை போலீசை கொன்று எரித்த குற்றவாளி சுட்டுப்பிடிப்பு: எஸ்ஐயை தாக்கி தப்பியபோது துப்பாக்கிச்சூடு; விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம் appeared first on Dinakaran.