தண்டையார்பேட்டை: ராயபுரம் ஜி.எம்.பேட்டை பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான பெண்ணுக்கு 9 வயதில் ஒரு மகள், 2 வயதில் ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து 9 வயது சிறுமி வீட்டிற்கு நடந்து சென்ற போது, தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதனால், ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள இறைச்சி கடையில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டு, வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, அங்கு போதையில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், சிறுமியை வழிமறித்து, திடீரென முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியிடம் தவறாக நடந்த ராயபுரம் பி.வி.கோயில் தெருவை சேர்ந்த கணேசன் (54) என்பவரை, போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
