3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

நெல்லை: நெல்லையில் 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளுக்கு ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த சேகர்(41). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் ஒரு குழந்தை உள்ளனர். இவர் கடந்த 2023ம் ஆண்டு 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த சிறுமிகளை ஆனந்தசேகர் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமிகள் இதுகுறித்து வெளியே தெரிவிக்காமல் இருந்தனர். இந்தநிலையில் சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்ததையடுத்து, இதுகுறித்து பெற்றோர்கள் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த சேகரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுரேஷ்குமார் இன்று (வியாழன்) தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில், இது சமூகத்தில் நடைபெறும் அரிதிலும் அரிதான வழக்கு என சுட்டிக்காட்டினார். பிஞ்சு குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related Stories: