நெல்லை: நெல்லை அருகே பாளை-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லதா(56). இவர்களுக்கு ஒரு மகளும், மாயாண்டி (27) என்ற மகனும் உள்ளனர். கண்ணன் அந்த பகுதியில் ஆட்டு இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். அதில் அவரது மகன் மாயாண்டி உதவியாக இருந்து 2 பேரும் தொழில் செய்து வந்தனர். மாயாண்டிக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாயாண்டி வழக்கம் போல் அதிக போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் தனது தாய் லதாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஒருகட்டத்தில் எல்லை மீறி தாய் என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லதா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாயாண்டியின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த மாயாண்டி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த மாயாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தாய் லதாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
