அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தால் அதிமுக உட்கட்சி குழப்பத்தை திசைதிருப்ப அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானமா? பேரவையில் முதல்வர் பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக உறுப்பினர்களால் அப்பாவுவை பேரவை தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானம் தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால் இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதை பார்த்து மக்களே நகைப்பார்கள் என்பதுதான் உண்மை. 2017ம் ஆண்டு என்னால் இதுபோன்ற ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டதை எண்ணி நான் அன்றைக்கு வருந்தினேன் என்று என் உரையில் பதிவு செய்துள்ளேன். ஆனால் இத்தீர்மானம் இன்றைக்கு கொண்டு வரப்பட்டதன் மூலம் – கடந்த பேரவைகளின் செயல்பாடுகள், அன்றைய பேரவைத் தலைவர் ஜனநாயகத்தை மதியாது நடந்துகொண்ட முறைகளையும் பற்றி இங்கேயுள்ள நம்முடைய பேரவை முன்னவர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களுக்கும், ஏன், நம்முடைய எதிர்க்கட்சி தலைவருக்கும் கூட நன்றாக தெரியும். நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் அவற்றோடு தற்போதைய பேரவை தலைவரின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்து, நம்முடைய பேரவை தலைவர் எவ்வாறு நடுநிலையோடு செயல்படுகிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்த விவாதத்தை கருதுகிறேன். பேரவை தலைவர், ஜனநாயக கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர்கள் மனம் வருந்தாத அளவில், தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்பவர். நேர்மையாக கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கும் பண்பு கொண்டவர். அவரது நடுநிலையோடு நிற்கும் நேர்மைத் திறனும், அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பழகும் பாங்கும் என்னை கவர்ந்த காரணத்தால்தான் அவரை இப்பதவிக்கு நான் முன்மொழிந்தேன்.

கடந்த காலங்களில் நடைபெற்றதுபோல் அல்லாமல், ஜனநாயக அமைப்பின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றே என நினைத்து செயலாற்றி வருகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பாசம், பற்று கொண்டு செயல்படுபவர் நம்முடைய பேரவை தலைவர் என்பதை மனச்சாட்சியுடன் சிந்திப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள். பேரவை தலைவருக்கு அருகில் வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அன்போடு பேசிச் செல்வதை இந்த பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பார்த்த காட்சி தான். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்ஜாடையாக அவரோடு பேசி தங்கள் எண்ணத்தை குறிப்பால் உணர்த்துவதையும் உங்களில் பலரும் பார்த்திருக்கலாம்.

இந்த தீர்மானம் மு.அப்பாவுவின் மீது சில அதிமுக உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி அவர்கள் வைத்த வாதங்களில் உண்மைக்கு மாறான செய்திகள் உள்ள காரணத்தால், அதனை மறுத்து, விளக்கத்தை எடுத்து வைத்து – பேரவை தலைவரின் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய கடப்பாடு, கடமை, பொறுப்பு முதலமைச்சருக்கும் உள்ளது, இங்கே உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ளது. அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளாக அன்றைக்கு பயன்படுத்தப்பட்ட பல சொற்கள், ‘அருகதை’, ‘தகுதி’, ‘என்ன யோக்கியதை இருக்கிறது’ என்று திமுக உறுப்பினர்களை பார்த்து அன்றைக்கு பேசப்பட்ட அந்த வார்த்தைகள், இன்றைக்கு அவையில் பேசப்படுமானால், உடனே பேரவை தலைவரால் அந்த வார்த்தைகள் நீக்கப்பெற்றுள்ளன.

அன்றைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினால் அவைக்குறிப்பில் இடம் பெறும். திமுக உறுப்பினர்கள் பேசினால் நீக்கப்படும் என்ற நிலை. இன்றைக்கு பேரவை தலைவர் அப்படியா நடக்கிறார்? இல்லை. நம்முடைய பேரவை தலைவர், அதிமுக உறுப்பினர்கள் பேசுகிற இதுபோன்ற ஒன்றிரண்டு வார்த்தைகளை கூட விட்டுவிடுகிறார். ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் கண்டிப்பாக நடந்துகொள்கிறார் என அமைச்சர்கள், உறுப்பினர்கள் சொல்லும்போது, அதைக்கேட்டு உள்ளபடியே எனது மனம் மகிழ்ச்சி அடைந்தது. ஏனென்றால், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் தர வேண்டும், அவர்கள் இந்த அரசின் செயல்பாட்டினை செம்மைப்படுத்துபவர்களாக உள்ளவர்கள் என்பதில் கலைஞரின் வழி நடக்கும் திராவிட மாடல் அரசுக்கு அந்த எண்ணம் உண்டு.

கூட்டணியில் உள்ள எங்கள் கட்சி உறுப்பினர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களில் பங்குபெற, முன்பு அளிக்கப்பட்டதுபோல தனியே வாய்ப்பு அளிக்காமல், எங்கள் கணக்கிலேயே பேரவை தலைவர் சேர்த்துவிடுகிறார். கேட்டால், உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவர்கள் என்ற காரணத்தால் என்பார். அது மாதிரியா முன்னர் நடந்தது? ஒன்றிரண்டு விஷயங்களை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். பல நாட்களில் அதிமுக உறுப்பினர்களை பேச அனுமதித்துவிட்டு, திமுக உறுப்பினர்கள் பேச பெயர் பட்டியலில் இடம் பெற்றும், இன்னொரு நாள் பேசலாம் என்றும் சொல்லி இருக்கிறார்.

பேரவை தலைவரின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாக பாராட்ட முடியாவிட்டாலும், மனதிற்குள் பாராட்டிக் கொண்டு தான் இருப்பார்கள். இந்த அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தால் இப்படி ஒரு தீர்மானமா? உள்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அதை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என்ற விவாதத்தை வெளியில் உள்ளவர்கள் நடத்தட்டும். நாம் நடத்த வேண்டாம். ஆனால் இப்படி ஒருவர் மீது இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தோமே என்று எதிர்காலத்தில் உங்கள் மனச்சாட்சி உறுத்தும். பேரவை தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். இந்த அம்பை இந்த அவை ஏற்காது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* ‘நினைத்துப் பார்த்தாலே நெஞ்சும் சுடுகிறது’
எங்களை பொருத்தவரையிலும் விவாதங்களில் விருப்பு, வெறுப்பின்றி நாகரிகமாக வாதங்களை வைக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். 23.3.2017 அன்று அன்றைக்கு இந்த அவையில் நான் பேசியதை எண்ணிப் பார்க்கிறேன். எத்தனை விதிமீறல்கள், மரபுகளில் இருந்து விலகல்கள், என்னுடைய உரையில் அன்றைக்கு சுட்டிக்காட்டியுள்ளேன். நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் சுடுகிறது. அதனை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். அதுமாதிரியா இன்றைக்கு நடக்கிறது? என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். நான் அன்றைக்கு உள்ளபடியே வேதனைப்பட்டேன்.

அந்த வேதனையின் வெளிப்பாடாகத்தான் அது மீண்டும் தொடரக் கூடாது என்று முடிவெடுத்தேன். இந்த அவையில் அதுமாதிரி நிகழ்வுகள், விதிமீறல், ஜனநாயகத்தை புறந்தள்ளும் மரபு மீறல்கள், எதுவும் நிகழக்கூடாது என்பதில் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நான் காட்டிய உறுதி, அப்பாவுவிடம் பொறுப்பை ஒப்படைக்க செய்தது. அவரும் முழுமையாக அதனை உணர்ந்து, பேரவை தலைவராக தன்னுடைய பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்து செயலாற்றுகிறார்.

The post அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தால் அதிமுக உட்கட்சி குழப்பத்தை திசைதிருப்ப அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானமா? பேரவையில் முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: