பிராக் மாஸ்டர்ஸ் செஸ்; செக் வீரருக்கு செக்: பிரக்ஞானந்தா அசத்தல்

பிராக்: செக் குடியரசின் பிராக் நகரில் நடந்து வரும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று செக் வீரரை இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சிறப்பாக ஆடி வென்றார். பிராக் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்திய வீரர்களான தமிழகத்தின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 வீரர்கள் மோதி வருகின்றனர். பிரக்ஞானந்தா முதலில் ஆடிய இரு சுற்று போட்டிகளில், துருக்கி வீரர் குரேல் எடிஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு எதிராக டிரா செய்திருந்தார்.

இந்நிலையில் 3வது சுற்று போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அப்போட்டியில் நேற்று செக் வீரர் நிகுயென் தாய் டாய் வான் உடன் பிரக்ஞானந்தா மோதினார். நிம்ஸோ இந்தியன் டிபன்ஸ் முறையில் தனது காய்களை நகர்த்திய பிரக்ஞானந்தா செக் வீரரை திணறடித்தார். 14வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வலுவான நிலையில் தன் காய்களை நிறுத்தி இருந்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் செக் வீரர் தோல்வியை ஒப்புக் கொண்டு வெளியேறினார். 3 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் சிதம்பரம் 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

The post பிராக் மாஸ்டர்ஸ் செஸ்; செக் வீரருக்கு செக்: பிரக்ஞானந்தா அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: