தனியார் வங்கியில் அடகு வைத்த ரூ.2 கோடி தங்க நகைகள் மோசடி: கவரிங் வைத்து ஏமாற்றிய மேலாளர் உட்பட 4 பேர் கைது

சிவகங்கை: தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த ₹2 கோடி மதிப்பிலான தங்க நகைகளுக்கு பதில், கவரிங் நகையை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லலில் உள்ள தனியார் வங்கியில் சமீபத்தில் ஆண்டு ஆய்வை, மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் குழுவினர் நடத்தினர். இதில் கடந்த மே முதல் செப்டம்பர் வரை வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளின் எண்ணிக்கை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தபோது தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் வங்கி மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் சிலர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மொத்தம் 533 பவுன் அடமான நகைகள், இவ்வாறு மோசடி செய்யப்பட்டு மாற்றப்பட்டிருந்தது.

இதன் மதிப்பு ₹2கோடியே 3லட்சத்து 86ஆயிரம் ஆகும். இதுபற்றி மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளரான பட்டுக்கோட்டை, கோட்டைக்குளம் மேலமேட்டை சேர்ந்த விக்னேஷ்(34), உதவி மேலாளர் ராஜாத்தி(39), மோசடிக்கு உதவிய ரமேஷ்(38), சதீஷ்(21) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.

The post தனியார் வங்கியில் அடகு வைத்த ரூ.2 கோடி தங்க நகைகள் மோசடி: கவரிங் வைத்து ஏமாற்றிய மேலாளர் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: