வுஹான் ஓபன் டென்னிஸ்: பைனலில் சபலென்கா

வுஹான்: சீனாவில் நடைபெறும் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா தொடர்ந்து 3வது முறையாக தகுதி பெற்றார். வுஹான் தொடரில் ஏற்கனவே 2022, 2023ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சபலென்கா (26 வயது, 2வது ரேங்க்), அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் (20 வயது, 4வது ரேங்க்) உடன் நேற்று மோதினார். முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் இழந்து பின்தங்கிய அவர், பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடி 1-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 26 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சாம்பியனான சபலென்கா இந்த முறையும் கோப்பையை முத்தமிட்டு ஹாட்ரிக் சாதனை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உள்ளூர் நட்சத்திரங்கள் ஜின்யு வாங் (23 வயது, 51வது ரேங்க்) – கின்வென் ஸெங் (22 வயது, 7வது ரேங்க்) இடையே நடந்த மற்றொரு அரையிறுதியில் கின்வென் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 39 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சபலென்கா – கின்வென் மோதுகின்றனர்.

The post வுஹான் ஓபன் டென்னிஸ்: பைனலில் சபலென்கா appeared first on Dinakaran.

Related Stories: