செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.

அதனை தொடர்ந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் நீதிபதி அபய் எஸ்.ஓஹா முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி முறையிட்டார். அதில் உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள்? எப்போது முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என வாதிட்டார். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சில கேள்விகளுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்காமல் இருந்த நிலையில் நாளை பதிலளிக்கவும் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 5ம் தேதி என்பது மிக நீண்ட காலமாக இருக்கும்; எனவே இன்றைய தினம் வழக்கை விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா கோரிக்கை வைத்தார். அடுத்த வாரம் முழுவதும் ‘லோக் அதாலத்’ வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளதால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கை விசாரிக்க முடியாது என தெரிவித்து வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

The post செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: