ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்தியா – கனடா உறவில் நெருக்கடி முற்றுகிறது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வசித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய தூதர் உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி கடந்த சில தினங்களுக்கு முன் கனடா கடிதம் அனுப்பியது. இதனை மறுத்த இந்தியா, இந்தியாவிலுள்ள கனடா தூதரை வௌியேற உத்தரவிட்டது. மேலும் கனடாவில் இருந்த இந்திய தூதரர்களை திரும்ப பெற்றது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, “நிஜ்ஜார் கொலை வழக்கில் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டை முன் வைத்தேன். நிஜ்ஜார் கொலை வழக்கில் நாங்கள் இந்தியாவின் ஒத்துழைப்பை நம்பியிருந்தோம். ஆனால் இந்தியா ஒத்துழைக்கவில்லை. இந்த விவகாரத்தில் எங்களிடம் வலுவான ஆதராங்கள் இல்லை. அதனால் இணைந்து பணியாற்றி ஆதாரங்களை கண்டறியலாம் என கனடா தெரிவித்தது. அதற்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை” என்று வௌிப்படையாக உண்மையை ஒப்பு கொண்டார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த பேச்சு குறித்து ஒன்றிய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சந்தீப் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது, “கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்தது. தற்போது எந்த வலுவான ஆதாரமும் இல்லை என கனடா பிர தமர் ட்ரூடோ ஒத்து கொண்டுள்ளார். தற்போது இந்தியா – கனடா நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி முற்றுவதற்கு ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளே காரணம்” என தெரிவித்தார்.

The post ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்தியா – கனடா உறவில் நெருக்கடி முற்றுகிறது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: