உத்திரமேரூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சிறுங்கோழி கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சிறுங்கோழி கிராமம் வழியாக செல்லும் செங்கல்பட்டு சாலையில் நான்கு வழிச்சாலை பணிக்காக எடுக்கப்பட்ட பள்ளத்தால், குடிநீர் குழாய் இணைப்பு சேதமானது. இதனால், கடந்த 6 மாதங்களாக சிறுங்கோழி கிராம மக்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாலை விரிவாக்க பணி முடிவடைந்து, ஒரு மாத காலம் ஆகியும் இதுநாள் வரை குடிநீர் விநியோகிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளுக்கும் கிராமக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து உத்திரமேரூர் – செங்கல்பட்டு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உத்திரமேரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post உத்திரமேரூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: