மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முதல் மனைவியுடன் சேர்ந்த வாழ ஆசைப்பட்ட கணவன், 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ராஜா (42). பை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். ஏற்கனவே, திருமணமான இவருக்கு பானுப்பிரியா (42) என்பவருடன் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு 2வது திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சரத் (16), குரு (15) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபகாலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜா முதல் மனைவியான சித்ராவுடன் மீண்டும் வாழ நினைத்து, தினமும் மது அருந்திவிட்டு வந்து பானுப்பிரியாவிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

வழக்கம்போல, நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வந்த ராஜா, 2வது மனைவியான பானுப்பிரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், நீ செத்தால்தான் முதல் மனைவியுடன் வாழ முடியும் என்று கூறி பானுப்பிரியாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். தீப்பற்றி எரிந்தநிலையில் பானுப்பிரியாவின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் பானுப்பிரியா, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து காஞ்சி போலீசார், வழக்குப்பதிவு செய்து கணவர் ராஜாவிடம் விசாரிக்கின்றனர்.

The post மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: