போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் 26ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூப் 2 தேர்வில், 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி நேரடியாக, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில், வரும் 26ம் தேதி முதல், காலை 10 மணி முதல், மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாநில அளவிலான மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்களின் விபரத்தை, 04286 -222260 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

The post போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: