காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா: மாப்பிள்ளை அழைப்புடன் நாளை துவக்கம்

காரைக்கால்: அறுபத்துமூன்று நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடைபெறும். காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் புராண மரபின்படி ஆனி மாதம் பவுர்ணமி தினத்தில் இந்த விழா நடைபெறும். மாங்கனி திருவிழாவில் மாப்பிள்ளை அழைப்பு, அம்மையார் திருக்கல்யாணம், சிவனடியார் வேடத்தில் சிவபெருமான் வருகை, சிவபெருமானுக்கு அமுது படையல், கணவர் பிரிந்து செல்லுதல், அம்மையார் சிவபெருமானிடம் ஐக்கியமாகும் உற்சவங்கள் அடுத்தடுத்து நடைபெறும்.

அதன்படி இந்தாண்டு மாங்கனி திருவிழா பந்தல்கால் முகூர்த்ததுடன் கடந்த மே மாதம் துவங்கியது. இந்தநிலையில் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பரமதத்த செட்டியாரை அம்மையார் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் மாங்கனி திருவிழா நாளை (19ம் தேதி) காலை 9 மணிக்கு துவங்குகிறது. நாளை மறுநாள் காலை 7.35 மணிக்கு புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு வருதல், 8 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்துக்கு வருதல், காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு, இரவு 10 மணிக்கு பரமதத்த செட்டியாரும், புனிதவதியாரும் முத்து சிவிகையில் வீதியுலா நடக்கிறது.

21ம் தேதி காலை 9 மணிக்கு பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா நடைபெறும். அப்போது பக்தர்கள் வீட்டு மாடிகளில் நின்று மாங்கனிகளை இறைத்து வழிபடுவார்கள். அன்று மாலை 6 மணிக்கு அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைத்தல், இரவு 11 மணிக்கு பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோயிலில் பரமதத்தருக்கு 3வது திருமணம், 22ம் தேதி அதிகாலை 5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூலை 21ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

The post காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா: மாப்பிள்ளை அழைப்புடன் நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: